TN VELAI

தமிழ்நாடு-வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்

குழந்தைகள் காப்பக பணியாளர், சமையல் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் காப்பக பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு நவம்பர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி அறிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையத்தோடு இணைந்த 15 குழந்தைகள் காப்பகப் பணியாளர்கள் மற்றும் 15 குழந்தைகள் காப்பக சமையல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் புதிதாக ஆட்களை தேர்வுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 இதையொட்டி மேற்கண்ட பணிகளுக்கு நவம்பர் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட குழந்தைகள் நல வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
 இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவம் குறித்த விவரம் மற்றும் இனசுழற்சி முறை விவரங்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், மாவட்ட திட்ட அலுவலகம், காஞ்சிபுரம் ஒன்றிய அலுவலக விளம்பரப் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளது.
 இதற்கான நேர்முகத்தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை குழந்தைகள் காப்பக பணியாளர் பதவிக்கும், மாலை 2 மணி முதல் 5 மணி வரை சமையல் உதவியாளர் பதவிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படும்.
 பொதுவான நிபந்தனைகள் : விண்ணப்பதாரர் காலிப் பணியிடம் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சிக்கு உள்பட்ட குக்கிராமங்களில் வசிப்பவராகவும், நகராட்சிப் பகுதிகளில் காலிப் பணியிடம் உள்ள பகுதி (வார்டு) அல்லது அருகில் உள்ள பகுதியில் (வார்டு) வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்.
 திருமணமான மகளிராக இருக்க வேண்டும், விதவை, ஆதரவற்ற விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஊனமுற்றவர்களுக்கு உரிய வகையில் சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும்.
 தகுதிகள் : குழந்தைகள் காப்பக பணியாளர் சம்பளத் தொகுப்பு ஊதியம் ரூ.3000, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2016 அக்டோபர் 1-ஆம் தேதியன்று வயது 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும் (விதவை மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 40 வயது வரை, ஊனமுற்றோருக்கு 38 வயது வரை, மலைவாழ் விண்ணப்பதாரர்களுக்கு 20 வயதிலிருந்து 40 வயது வரை)
 சமையல் உதவியாளர், சம்பளம் தொகுப்பு ஊதியம் ரூ.1500. எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 2016 அக்டோபர் 1-ஆம் தேதியில் வயது 20 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். விதவை மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 20 முதல் 45 வயதுக்குள்ளும், ஊனமுற்றோருக்கு 43 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மலைவாழ் விண்ணப்பதாரர்களுக்கு 20 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
 மேற்கண்ட தகுதிகளை உடையவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment